விலை அதிகரிப்பை தடுக்க என்.டி.சி மில்கள் மூலம் நூல் உற்பத்தி செய்யவேண்டும்

திருப்பூர், ஏப். 10:தனியார் மில்கள் அமல்படுத்தி வரும் நூல் விலையேற்ற தாக்குதலை முறியடிக்க என்.டி.சி மில்கள் மூலம் நூலை உற்பத்தி செய்யவேண்டும் என்று மத்திய அரசை திருப்பூர் எம்.பி.யும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணை செயலாளருமான கே.சுப்பராயன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டிலுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் அவர் நிருபர்களிடம் தெரிவித்ததாவது:

மோடி ஆட்சிக்கு வந்தால் சிறு,குறு தொழில்கள் வளர்ச்சி பெறும் என்று

நம்பி மக்கள் ஆதரவளித்தனர். ஆனால் அனைத்து தொழில்களையும் அழித்து கார்பரேட்டுகள் வளம் பெறும் கொள்கையை பாஜ அரசு கடைபிடிக்கிறது.

 அதன் ஒரு பகுதி தான் தாறுமாறாக அடிக்கடி நிலவி வரும் நூல் விலையேற்றமாகும். திருப்பூரில் வேலைக்கு வந்து குவிந்துள்ள தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களை சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஆகியோருக்கு வேலைவாய்ப்பின்மையையும், பின்னலாடை தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பையும் இந்த நூல் விலையேற்றம் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி தாக்குதலுக்கு பின் திருப்பூரிலுள்ள தொழில் நிறுவனங்கள் ஓரளவு மீண்டெழுந்த நிலையில் நூல் விலையேற்றம் மீண்டும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசுக்கு சொந்தமான தேசிய ஜவுளி கழகத்தின் கீழ் 100க்கும் மேற்பட்ட நூற்பாலைகள் (என்.டி.சி மில்) நாடு முழுவதும் இயங்கி வருகிறது. இதன் மூலம் நூல்களை தயார் செய்து  தமிழகத்தின் தேவைக்கு நியாயமான விலையில் மத்திய அரசு வழங்கினால் திருப்பூர் பனியன் தொழில் தடுமாற்றத்திலிருந்து காப்பாற்றப்படும். தொழிலாளர்களும் வேலை பெறுவார்கள், இதன் மூலம் தனியார் மில்களால் அடிக்கடி ஏற்படும் நூல் விலையேற்ற தாக்குதல் முறியடிக்கப்படும்.

மேலும் தமிழக கவர்னர், ஆட்சி மாற்றம் வந்துவிடும் என்பதை மையப்படுத்தி பல்கலைகழக துணை வேந்தர்களை அவசர அவசரமாக நியமித்திருக்கிறார். இது அத்துமீறல், ஜனநாயக நடைமுறையை கவர்னரே மீறுவது நாட்டுக்கு உகந்ததல்ல. அதே போல  அரக்கோணம் அருகேவுள்ள ராணிப்பேட்டை மாவட்டத்தில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு தேர்தல் பணியாற்றியவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

அரசியல் ரீதியாக நடைபெற்ற இந்த படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் உடனடியாக கைது செய்ய வேண்டும். குற்றவாளிகள் தப்பிக்காத வகையில் வழக்குகள் பின்னப்பட வேண்டும். திருப்பூர் பிச்சம்பாளையம் புதூர் அருகேவுள்ள நல்லாற்றில் சாம்பல் கழிவுகள் கொட்டப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இதனால் மாசுபாடு ஏற்பட்டு சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: