கோவை, ஏப்.10: கோவை மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள 45 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கோவையில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், காலையிலேயே அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை போன்றவற்றில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வரிசையில் காத்திருக்கின்றனர். சுகாதார துறையினர் கூறியதாவது: ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி, முன்கள பணியாளர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வந்தது. அதன்பின், பொதுமக்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என அரசு அறிவித்து இருந்தது. ஆனால், இந்த தடுப்பூசி போட்டுக்கொள்ள பொதுமக்கள் இடையே போதிய ஆர்வம் இல்லாமல் இருந்தது. தற்போது, தினமும் தொற்று அதிகரித்து வருவதை தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர்.