கோவை, ஏப்.10: கோவை பூசாரிபாளையம் ரோட்டில் உள்ள முத்தண்ணன் குளத்தில் நேற்று ஆண் சடலம் மிதப்பதாக அந்த பகுதி பொதுமக்கள் ஆர்.எஸ்.புரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் கனகசபாபதி தலைமையிலான போலீசார் அங்கே சென்று சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இறந்த நபருக்கு சுமார் 45 வயது இருக்கலாம் என தெரிகிறது.
அவரின் கழுத்து கத்தியால் அறுக்கப்பட்டு இருந்தது. கழுத்து முழுவதையும் தனியாக அறுத்து துண்டிக்க முயற்சி செய்து பாதியில் விட்டுவிட்டதாக தெரிகிறது. இறந்த நபர் அரைக்கை சட்டையும், டவுசரும் அணிந்து இருந்தார். கையில் ஆறுமுகம் என பச்சை குத்தப்பட்டு இருந்தது. போலீசார் அக்கம் பக்கத்து குடியிருப்பு மக்களிடம் இறந்த நபர் குறித்து விசாரித்தனர். குளக்கரையில் மது குடித்தபோது ஏற்பட்ட மோதல் காரணமாக இந்த நபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு சடலத்தை குளத்தில் வீசி சென்றிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.