கோவை, ஏப்.10: கோவையில் கொரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம், தினமும் 20 ஆயிரம் பேர் வரை பரிசோதனை மேற்கொள்ள முடியும் என்று சுகாதார துறையினர் தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து சுகாதார துறையினர் கூறியதாவது:
கோவை மாவட்டத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் அதிகபட்சமாக ஒரே நாளில் 750 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆனால், தற்போது கோவையில் அதிகரிக்கும் கொரோனா தொற்றை கணக்கில் எடுத்துக்கொண்டால் அடுத்த சில வாரங்களில் ஒரு நாளைக்கு 1,000 பேர் வரை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இவர்களில் பெரும்பாலானோர் மாநகராட்சி பகுதியில் வசிப்பவர்களாக இருப்பார்கள்.
எனவே, அதிகரிக்கும் கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யும் ஆய்வகங்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இதன்மூலம், ஒரு நாளைக்கு 12 ஆயிரம் பேர் முதல் 20 ஆயிரம் பேர் வரை கொரோனா பரிசோதனை செய்துக்கொள்ள முடியும். கடந்த முறை 8 ஆய்வகங்களில் மட்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.கோவை மாநகராட்சியை பொறுத்தவரை 35 வார்டுகளில் கொரோனா பாதிப்புகள் சற்று அதிகமாக உள்ளது. இங்கு தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளது. கோவை மாநகராட்சியில் 5 மண்டலம் உள்ளது. இதில், குறைந்தபட்சம் ஒரு மண்டலத்தில் 500 பேர் வீதம் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. மேலும், தொற்று உறுதி செய்யப்பட்ட ஒரு நபரின் தொடர்புடைய குறைந்தபட்சம் 20 பேரிடம் இருந்து சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படுகிறது.கோவையில் தற்போது கொரோனா பரிசோதனை முடிவில் 6 சதவீதம் முதல் 6.5 சதவீதம் பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகிறது. அடுத்து வரும் சில வாரங்கள் மிக முக்கியமானதாக உள்ளது. எனவே, கோவை மாவட்டம் முழுவதும் சுகாதார துறையினர், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினார்.