கோவை, ஏப். 10: கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் தற்போது கடந்த ஒருவார காலமாக அதிகரித்து காணப்படுகிறது. தினமும் 350க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கோவை மாநகராட்சி சார்பாக கொரானா பரவல் தடுப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக முகப்கவசம் அணியாதவர்களுக்கு ரூபாய் 200 அபராதம் விதிக்கப்பட்டு தீவிரமாக வசூல் செய்யப்பட்டு வருகிறது. சமூக வலைதளங்களில் கோவை மாநகராட்சி சார்பாக முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூபாய் 500 அபராதம் விதிக்கப்படும் என பரவியது.
இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியனிடம் கேட்டபோது, ‘‘முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியவில்லை என்றால் ரூபாய் 200 மட்டுமே அபராதம் விதிக்கப்படும்’’ என தெரிவித்தார்.இதனிடையே கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 35 வார்டுகளில் வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. கோவை மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட கருப்பக் கவுண்டர் வீதியில் ஒரே வீட்டை செய்த 5 நபர்களுக்கு கொரோனா ஏற்பட்ட காரணத்தினால் அந்த வீதியில் உள்ள 15 வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கருப்பக்கவுண்டர் வீதியில் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இப்பணியினை மாநகராட்சி கமிஷனர் குமாரவேல் பாண்டியன் நேரில் சென்று ஆய்வு செய்தார்.