வன்னியர்களுக்கு 10.5% இடஒதுக்கீடு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

சென்னை: வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கிய அரசாணைக்கு உடனடியாக எந்த தடையும் விதிக்க முடியாது என மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இச்சட்டத்தை எதிர்த்து மதுரையை சேர்ந்த அபீஷ் குமார் என்பவர் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தின் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நாகமுத்து, ‘‘வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு தேர்தலை அடிப்படையாகக் கொண்டு அவசரகதியில் வழங்கப்பட்டுள்ளது. இதனால் மற்ற பிரிவினர் கண்டிப்பாக பாதிப்படைவார்கள். எனவே அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்ட விவகாரத்தில் உடனடியாக எந்த தடை உத்தரவும் பிறப்பிக்க முடியாது. இதுஅரசின் கொள்கை சார்ந்த முடிவு. இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க வேண்டும்’’ என தெரிவித்தனர்.

Related Stories: