கருவேப்பிலங்குறிச்சி அருகே பரபரப்பு கோயில் தர்மகர்த்தா அடித்துக் கொலை போலீசார் தீவிர விசாரணை

விருத்தாசலம், ஏப். 10:  விருத்தாசலம் அருகே கோயில் தர்மகர்த்தா அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே உள்ள மேலப்பாளையூர் கிராமத்தை சேர்ந்தவர் தவலிங்க செல்வராயர் (72). இவருக்கு புஷ்பவல்லி என்ற மனைவியும். 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இவர் அக்கிராமத்தில் உள்ள செல்லியம்மன், மாரியம்மன் உள்ளிட்ட கோயில்களுக்கு கடந்த 40 வருடத்திற்கு மேலாக தர்மகர்த்தாவாக இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு போன் வந்துள்ளது. உடனே வீட்டில் இருந்து கிளம்பி சென்றுள்ளார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.  இந்நிலையில் நேற்று அதிகாலை தர்மகர்த்தா குடும்பத்தினர் எழுந்து பார்த்த போது, அவரை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை தேடிப் பார்த்தபோது, காலை விருத்தகிரி என்பவருக்கு சொந்தமான இடத்தில் தலையில் பலத்த காயங்களுடன், உடல் முழுவதும் ரத்தக் கறையுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதையடுத்து கருவேப்பிலங்குறிச்சி காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில், விருத்தாசலம் டிஎஸ்பி மோகன், இன்ஸ்பெக்டர் விஜயரங்கன் மற்றும் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தவலிங்க செல்வராயர் எப்படி இறந்தார்?, தேர்தல் முன்விரோதம், அல்லது நிலப்பிரச்னை காரணமாக யாராவது அடித்து கொலை செய்தார்களா? என்ற பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

 அதனைத் தொடர்ந்து கடலூரில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியை சேர்ந்த ஒருவரிடம் சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று அதிகாலை நடந்த இச்சம்பவம் கருவேப்பிலங்குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: