இளம்பிள்ளை, ஏப்.10: இளம்பிள்ளை அருகே திருமணமாகி 2 ஆண்டில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் சரவணன்(37). தறி தொழிலாளியான இவர், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சங்கீதா(எ) ஞானமலர்(29) என்ற பெண்ணை 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி வாக்களிக்க செல்வதாக கூறிச்சென்ற சரவணன், அதற்கு பின்பு வீடு திரும்பவில்லை. இதனால், மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட சங்கீதா நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில், மகுடஞ்சாவடி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தாயார் சாலம்மாளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி துடித்தார். அப்போது, ஜாதி மாறி திருமணம் செய்ததால் மகளை வன்கொடுமை செய்து வந்ததாகவும், மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததால் அவரது சாவில் சந்தேகம் உள்ளதாவும் புகார் தெரிவித்தார்.