இளம்பிள்ளை அருகே திருமணமான 2ஆண்டில் இளம்பெண் மர்மச்சாவு தாய் பரபரப்பு புகார்

இளம்பிள்ளை, ஏப்.10: இளம்பிள்ளை அருகே திருமணமாகி 2 ஆண்டில் இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே இடங்கணசாலை ரெட்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம் மகன் சரவணன்(37). தறி தொழிலாளியான இவர், ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த சங்கீதா(எ) ஞானமலர்(29) என்ற பெண்ணை 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். கடந்த ஆண்டு இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து இறந்து விட்டது. இதுதொடர்பாக அவர்களுக்கிடையே குடும்பத் தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த 6ம் தேதி வாக்களிக்க செல்வதாக கூறிச்சென்ற சரவணன், அதற்கு பின்பு வீடு திரும்பவில்லை. இதனால், மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட சங்கீதா நேற்று முன்தினம் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில், மகுடஞ்சாவடி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவரது தாயார் சாலம்மாளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், சேலம் அரசு மருத்துவமனைக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி துடித்தார். அப்போது, ஜாதி மாறி திருமணம் செய்ததால் மகளை வன்கொடுமை செய்து வந்ததாகவும், மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததால் அவரது சாவில் சந்தேகம் உள்ளதாவும் புகார் தெரிவித்தார்.

இதன்பேரில், சரவணன் மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதித்து விசாரித்து வருகின்றனர். மேலும், சங்கீதாவுக்கு திருமணமாகி 7 ஆண்டுகள் முடியாததால் சங்ககிரி கோட்டாட்சியர் வேடியப்பன் விசாரித்து வருகிறார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், சங்கீதா குறவர் இனத்தைச் சேர்ந்தவர். இதனை மறைத்து தரகர் ஒருவர் சரவணனுக்கு திருமணம் செய்து வைத்துள்ளார். திருமணத்திற்கு பின்பு இதனை தெரிந்து கொண்ட சரவணன் மற்றும் அவரது குடும்பத்தினர் ஜாதி பெயரை சொல்லி கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். மேலும், வரதட்சணை கேட்டு வந்ததாகவும் தெரிகிறது. இந்நிலையில், சங்கீதா சேலையில் தூக்கில் சடலமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் உள்ளதாக தாயார் புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஆர்டிஓ விசாரித்து வருகிறார். பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரிய வரும். அதன்படி, நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

Related Stories: