திருச்சி, ஏப். 10: கொரோனா எண்ணிக்கை வேகமாக பரவுவதை அடுத்து அரசு, விதித்துள்ள பல்வேறு கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. இதில் பஸ்களில் நின்று கொண்டு செல்லக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பஸ்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வேலைக்கு வந்து செல்கின்றனர். குறிப்பாக மணப்பாறை, விராலிமலை, கரூர் ஆகிய மார்க்கத்திலிருந்து ஏராளமானோர் வேலைக்கு வந்து செல்கின்றனர். இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் பஸ்களில் அதிகளவில் கூட்டம் இருக்கும். தற்போது திருச்சி கோட்டத்தில் மாநகர் பகுதியில் 440, புறநகர் பகுதிகளில் 496 பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. தற்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதை அடுத்து கூட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளுக்கு மற்ற பகுதிகளில் செல்லும் பஸ்களை மாற்றி அனுப்பும் திட்டம் இருப்பதாக போக்குவரத்து கழக அலுவலக அதிகாரிகள் கூறினர்.