காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த, கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடந்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் அனைத்து தடுப்பு பணிகளையும் போர்க்கால அடிப்படையில் செய்கிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை தடுப்பு நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டதால் நோய்த் தொற்று விகிதம் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 2 வாரங்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இதையொட்டி, கட்டுபாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள கலெக்டர் தலைமையில் மாவட்ட அலுவலர்களுக்கான ஒருங்கிணைப்பு கூட்டம் நேற்று நடந்தது.
கூட்டத்தில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் பேசுகையில், தற்போது குடும்ப நிகழ்ச்சிகள், கூட்டங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் உள்பட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் உள்பட அரசின் விதிமுறைகளை பின்பற்றாதது, தொற்று பரவலுக்கு காரணமாக உள்ளது. இதையொட்டி, பொது இடங்களில் பொது மக்கள் முகக்கவசம் அணிந்து, நிறுவனங்கள் அரசின் நெறிமுறைகளை கடைப்பிடிப்பதையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பு, சுகாதாரத்துறை, காவல்துறை, வருவாய் துறையினர் கண்காணிக்க வேண்டும்.