செங்கல்பட்டு: கொரோனா தொற்று 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், தமிழக அரசு, திருவிழாக்களுக்கு தடை விதித்துள்ளது. இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாடியபடி, கலெக்டர் ஜான்லூயிசிடம் மனு அளித்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதையொட்டி தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாட்டு நடைமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகிறது. அதில் கோயில் திருவிழாகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், தெருக்கூத்து கலைஞர்கள் பல்வேறு வேடமிட்டு நடனமாடியபடி, கலெக்டர் ஜான்லூயிசிடம் தங்களது கோரிக்கை மனுவை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது. செங்கல்பட்டு மாவட்டத்தில் திருப்போரூர், கல்பாக்கம், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட தெருக்கூத்து கலைஞர்கள் குடும்பத்துடன் வசிக்கின்றனர். தற்போது தமிழகத்தில் கோரோனா 2வது அலை வீசுவதால், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதில் கோயில் திருவிழா, பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.