உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியம் காவனூர்புதுச்சேரி கிராமத்தில் ஆண்டுதோறும் அரசு சார்பில் அரசு நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்படுவது வழக்கம். இந்த நெல் கொள்முதல் நிலையங்களில் காவனூர்புதுச்சேரி, காரியமங்கலம், நாஞ்சிபுரம், ஆழ்வராம்பூண்டி, தளவராம்பூண்டி, கம்மாளம்பூண்டி, சோழனூர், அத்தியூர், அகரம்தூளி, பாரதிபுரம், மேனல்லூர் உள்பட 18க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட விவசாயிகள், தங்களது விவசாய நிலத்தில் பயிரிடும் நெல்களை, அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் வழங்கி வந்தனர். இந்நிலையில் இந்தாண்டு காவனூர்புதுச்சேரி கிராமத்தில் அரசின் நெல் கொள்முதல் நிலையங்கள் துவங்கவில்லை. இதுகுறித்து விவசாயிகள் பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.