வாலிபர் ஓடஓட விரட்டி படுகொலை

சென்னை, ஏப்.9: கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் சக்தி நகர் பட்டேல் சாலையை சேர்ந்தவர் பிரம்மதேவன். ஆட்டோ டிரைவர். இவரது மகன் நாராயணன் (23). பாலிடெக்னிக் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வீட்டில் இருந்து வந்தார். கடந்த சில வாரங்களாக திண்டிவனத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டில் தங்கியிருந்த நாராயணன், தனது தம்பி பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம்  நள்ளிரவு பிரம்மதேவனும், நாராயணனும் நெற்குன்றத்தில் உள்ள சாலையோர  உணவகத்தில் டிபன் சாப்பிட்டுவிட்டு, வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவ்வழியே ஆட்டோவில் வந்த 7 பேர் கொண்ட மர்ம கும்பல், இருவரையும் வழிமறித்தது.

அதன்பின்னர், நாராயணனுடன் தகராறில் ஈடுபட்டு, பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டியது. தந்தையும், மகனும் கும்பலிடம் இருந்து தப்பி ஓடினர். அவர்களை தொடர்ந்து விரட்டி சென்று, தந்தையின் கண்ணெதிரே நாராயணனை பட்டாக்கத்தியால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்த பின்னர், ஆட்டோவில் ஏறி, அங்கிருந்து தப்பி சென்றது. தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கோயம்பேடு போலீசார், நாராயணனின் சடலத்தை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். முதல்கட்ட விசாரணையில், யார் தாதா என்ற போட்டி காரணமாக,  கடந்த 4ம் தேதி  நாராயணன் அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி தனஞ்செயனை பட்டாக்கத்தியால் வெட்டியுள்ளார். இதனால் ஏற்பட்ட  முன்விரோதம் காரணமாக,  தனஞ்செயன் கும்பல் நாராயணனை கொலை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதையடுத்து, கோயம்பேடு தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் இக்கொலை தொடர்பாக, மதுரவாயல் கந்தசாமி நகர் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி சாரதி (19), நெற்குன்றத்தை சேர்ந்த செல்வா (19), 2 சிறுவர்கள் உட்பட 4 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: