செங்கல்பட்டு, ஏப்.9: செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. குறிப்பாக தாம்பரம், பல்லாவரம், மேடவாக்கம், மீனம்பாக்கம், பள்ளிக்கரணை உள்பட பல பகுதிகளில், கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினமும் 50க்கும் குறைவானவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திடீரென கடந்த சில வாரங்களாக, அதிகரித்து வருகிறது.
நேற்று முன்தினம் 304 பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று மட்டும் 398 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் நேற்று கொரோனாவால் 3 பேர் இறந்தனர். இதுவரை 59,048 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 55,128 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 2,679 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 838 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதற்கு, பொதுமக்கள் முகக்கவசம் அணியாதது, காய்கறி மார்க்கெட், வணிக வளாகத்தில் சமூக இடைவெளியின்றி இருப்பது ஆகிய காரணங்களால் கொரோனா வேகமாக பரவுகிறது. நகர பகுதிகளில் சுகாதார துறையினர் மற்றும் நகராட்சி அதிகாரிகள் அபராதம் விதிப்பதால், அந்த நேரத்தில் மட்டும் முகக்கவசம் அணிகின்றனர். இதேநிலை நீடித்தால், பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
இகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் நகர, கிராம பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாவட்ட நிர்வாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள நிறைந்த காய்கறி மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். ஆட்டோ, பஸ்களில் குறைவான பயணிகளை ஏற்றி செல்லுதல், முக கவசம் அணிவதை கட்டாயப்படுத்துதல், வணிக வளாகங்களில் குளிர்சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்த்தல் ஆகிய விதிமுறைகளை அமல்படுத்த வேண்டும். இல்லாத பட்சத்தில் இதன் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்ெகாள்ள வேண்டும்.’’ என்றனர்.மதுராந்தகத்தில் 23 பேர் பாதிப்புஅச்சிறுப்பாக்கம் ஒன்றியம் மோகல்வாடி கம்பன் தெரு, ஸ்கூல் தெரு, பிள்ளையார் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் 5 பெண்கள், 72 வயது மதிக்கத்தக்க முதியவர், 12 வயது சிறுவன் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதேபோல் திருமுக்காடு, எலப்பாக்கம், செம்பூண்டி, எல்.எண்டத்தூர், பெரும்பாக்கம், தொழுப்பேடு ஆகிய ஊராட்சிகளில் 5 ஆண்கள், ஒரு பெண் ஆகியோருக்கும், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தில் 13 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த ஊராட்சிகளில் அச்சிறுப்பாக்கம் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலதி, வீரமுத்து மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் பிளீச்சிங் பவுடர் தெளித்து சுகாதார பணிகளை செய்து வருகின்றனர்.சித்தாமூர் ஒன்றியத்தில் சோத்துப்பாக்கம் திருவிக நகர், கோயில் நகர், மேல்மருவத்தூர் சக்தி ஸ்ரீநகர், பாலாஜி நகர், கேசவராயப்பேட்டை, கீழ்மருவத்தூர், மழுவங்கரணை ஆகிய கிராமங்களில் 5 பெண்கள் உள்பட 10 பேருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த ஊராட்சி பகுதிகளில் சித்தாமூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரணி மற்றும் ஞானப்பிரகாசம் ஆகியோர் மேற்பார்வையில் ஊராட்சி நிர்வாகத்தினர் தீவிர சுகாதார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேற்கண்ட 2 ஒன்றியங்களை சேர்ந்த 23 பேர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மதுராந்தகம், மேல்மருவத்தூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.