மகனுக்கு சரமாரி கத்திக்குத்து: தந்தை கைது

திருக்கழுக்குன்றம், ஏப். 9: திருக்கழுக்குன்றம் அடுத்த புலியூர் கிராமத்தை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (48), தர்ப்பூசணி வியாபாரி. இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவியின் மகன் கிரிதரன் (18). புலியூர் மெயின் ரோட்டில் பனை நுங்கு வியாபாரம் செய்கிறார். அருகில் சற்று தூரத்தில் தந்தை பன்னீர்செல்வம் தர்ப்பூசணி கடை வைத்துள்ளார். பன்னீர்செல்வத்துக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால், கடையை விட்டு சென்று அடிக்கடி குடித்துவிட்டு வருவதாக கூறப்படுகிறது. இதையொட்டி தந்தை, மகன் இடையே வாக்குவாதம், சண்டை ஏற்படுவது வழக்கம்.

இந்நிலையில். நேற்று வழக்கம்போல் பன்னீர்செல்வம் மது அருந்திவிட்டு வந்தார். இதை பார்த்த கிரிதன், வியாபார நேரத்தில் கடையை விட்டு ஏன் சென்றீர்கள் என கேட்டு கண்டித்துள்ளார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பன்னீர்செல்வம், தர்ப்பூசணி அறுக்க பயன்படுத்தும் கத்தியால், மகன் கிரிதரணின் வயிற்றில் சரமாரியாக குத்தினார்.  தகவலறிந்து திருக்கழுக்குன்றம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த கிரிதரனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பன்னீர்செல்வத்தை கைது செய்தனர்.

Related Stories: