திருச்சியில் அதிகரிக்கும் கொரோனா தொற்று 800 படுக்கைகளுடன் 2 மையங்கள் திறப்பு

திருச்சி, ஏப்.9: திருச்சியில் தொற்று அதிகரிப்பால் 800 படுக்கை வசதிகளுடன் கொரோனா சிகிச்சை மையம் மீண்டும் 2 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டத்தில் 91 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 187 ஆகவும், பாதிப்பு 16,430 ஆகவும் உயர்ந்துள்ளது. தற்போது 855 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், மருத்துவமனையிலும் சிகிச்சையில் உள்ளனர். அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டிலிருந்து நேற்று 44 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

இந்நிலையில் கொரோனா பரவல் வேகமெடுத்து வருவதால் திருச்சியில் மீண்டும் 2 இடங்களில் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரியிலும், பாரதிதாசன் பல்கலைக்கழகத்திலும் கொரோனா சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. தலா 400 படுக்கைகள் என இரண்டு இடங்களிலும் 800 படுக்கைகள் தயாராக உள்ளது. 65வயதுக்கு கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேற்கண்ட 2 இடங்களிலும், 65 வயதுக்கு மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை அதிகரிப்பதை பொறுத்து மற்ற இடங்களிலும் சிகிச்சை மையங்கள் விரிவு படுத்தப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: