திருவெறும்பூர் அருகே ஆட்டோ டிரைவரை தாக்கி கைவிரல் கடித்து துண்டிப்பு

திருவெறும்பூர், ஏப்.9: திருவெறும்பூர் அருகே ஆட்டோ டிரைவரை தாக்கியதோடு அவரது கைவிரலை கடித்து துண்டித்தது தொடர்பாக 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். திருவெறும்பூர் அருகே கீழ மாங்காவனத்தை சேர்ந்தவர் சாங்கிலிமுத்து. இவரது மகன் திருநாவுக்கரசு(34), ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் திருநாவுக்கரசு வீட்டின் அருகே அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன், பாரதி, முல்லைவேந்தன் ஆகிய 3 பேரும் குடிபோதையில் தகாத வார்த்தைகள் பேசி தகராறு செய்து வந்துள்ளனர். இதனை திருநாவுக்கரசு தட்டிக்கேட்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அரவிந்தன், பாரதி, முல்லைவேந்தன் ஆகிய 3 பேரும் சேர்ந்து திருநாவுக்கரசை தாக்கியுள்ளனர். மேலும் திருநாவுக்கரசின் இடது கை விரலை முல்லைவேந்தன் கடித்து துண்டித்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த திருநாவுக்கரசை துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வரும் திருநாவுக்கரசு இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரவிந்தன், பாரதி, முல்லைவேந்தன் ஆகிய 3 பேரை தேடி வருகின்றனர்.

Related Stories: