முதலாவது வார்டு பகுதிகளில் குடிநீர் குழாய் உடைப்புகளை சரி செய்யக் கோரி மனு

திருப்பூர், ஏப்.9:   திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டல அலுவலகத்திற்கு 1-வது வார்டுக்கு உட்பட்ட 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்தனர். பின்னர் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அதில், திருப்பூர் மாநகராட்சி 1-வது வார்டுக்கு உட்பட்ட ராஜா பவுண்டரி வீதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக பாதாள சாக்கடை அமைப்பதற்காக குழி தோண்டப்பட்டது. அப்போது வீட்டுக் குழாய்களின் இணைப்புகளும் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் ராஜா பவுண்டரி வீதியில் உள்ள ஆயிரத்துக்கும் மேற்பட்ட  வீடுகளுக்கு கடந்த 15 நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை. மேலும், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளும் மூடப்படவில்லை. ஆகவே, உடைக்கப்பட்ட குடிநீர் குழாய்களை சீரமைத்து குடிநீர் விநியோகம் செய்யவும், பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட குழிகளை மூடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.  குடிநீர் குழாய் உடைப்புகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி அதிகாரிகள் உறுதியளித்தன்பேரில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.

Related Stories: