ஈரோடு, ஏப். 9: ஈரோடு காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் நேற்று நடந்த குண்டம் விழாவில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கினர். அதேபோல், சின்னமாரியம்மன் கோயிலில் ஜேசிபி வாகன உதவியுடன் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரியமாரியம்மன் மற்றும் அதன் வகையறா கோயில்களான சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழாவை கொரோனா பரவல் காரணமாக எளிமையாக நடத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதியளித்தது. இதன்பேரில், பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் கடந்த 6ம் தேதி இரவு ஒரே நேரத்தில் பூச்சாட்டப்பட்டு, விழா துவங்கியது. இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் 7ம் தேதி மூன்று கோயில்களிலும் கம்பம் நடப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வான காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழாவிற்காக நேற்று முன்தினம் இரவு குண்டம் பற்ற வைக்கப்பட்டு, நேற்று காலை 6 மணிக்கு குண்டம் விழா நடந்தது. இதில், பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால், கோயில் பூசாரிகள் மட்டும் குண்டம் இறங்கி தீ மிதித்தனர். திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து அம்மனை வழிபட்டு சென்றனர்.