ஈரோடு, ஏப். 9: ஈரோடு மாவட்டத்தில் மருத்துவமனைகளில் தீ விபத்தினை தடுப்பது குறித்து தீயணைப்பு துறை சார்பில் பயிற்சி கூட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் தீ விபத்தினை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவின் சார்பில் நேற்று பயிற்சி கூட்டம் நடந்தது. மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தலைமை தாங்கினார். உதவி தீயணைப்பு அலுவலர் வெங்கடாசலம் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது: 2 தளங்களுக்கு மேல் உள்ள மருத்துவமனைகளில் தானியங்கி தீயணைப்பு கருவிகள், தீ தடுப்பு உபகரணங்கள் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். அந்த உபகரணங்களை மருத்துவமனையின் நிர்வாகிகள் பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும். மின் கசிவால் ஏற்படும் தீ விபத்தை தீ தடுப்பான் கருவியை கொண்டு அணைக்க வேண்டும்.