பள்ளிபாளையம், ஏப்.9: அந்தமான், பெங்களூருவை சேர்ந்த 3 பேர் திருமண விழாவுக்காக கோவை வந்த போது கொரோனா தொற்றுக்கு ஆளாகினர். அவர்கள் மருத்துவமனையில் சொந்த ஊரான குமாரபாளையம் முகவரியை கொடுத்ததால், கிருமிநாசினியுடன் சம்பந்தபட்ட முகவரிக்கு சென்ற நகராட்சி பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சியில், கடந்த 4நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையினர் அறிவிப்பை அடுத்து, நகராட்சி பணியாளர்கள் கொரோனா பாதித்தவர்களின் வீட்டுக்கு சென்று கிருமி நாசினி தெளிக்க முயன்றனர். ஆனால் அந்த வீடுகளில் வசித்தவர்கள், எதற்காக கிருமிநாசினி தெளிக்கிறீர்கள் என நகராட்சி பணியாளர்களிடம் விசாரித்தனர். அதற்கு அவர்கள், இந்த வீடுகளை சேர்ந்த பெங்களூருவில் வசிக்கும் இருவர், அந்தமானில் வசிக்கும் ஒருவர் என 3 பேருக்கு கொரோனா இருப்பதாகவும், இதனால் மருந்து தெளிப்பதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த வீடுகளில் வசிப்பவர்கள், மேற்கண்ட மூவரும் குமாரபாளையத்தை சேர்ந்தவர்கள் தான். தற்போது இவர்கள் இங்கு வசிக்கவில்லை. அந்தமான், பெங்களூருவில் வசிக்கும் அவர்கள், கோவையில் நடந்த திருமணத்திற்கு வந்த போது கொரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் குமாரபாளையம் முகவரியை அளித்துள்ளனர் என்றனர்.
இதனால் நகராட்சி ஊழியர்கள் நிம்மதியடைந்தனர். கொரோனா பாதித்த 5 பேரின் வீடுகளில் கிருமிநாசினி தெளித்த அவர்கள், அருகில் உள்ள வீடுகளில் வசிப்போரை எச்சரித்தும் தனிமைப்படுத்தினர். இதையடுத்து அப்பகுதியில் நகராட்சி ஆணையாளர் ஸ்டான்லிபாபு நேரில் பார்வையிட்டு கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.