பாலக்கோடு அருகே தேர்தல் தகராறில் தம்பியை அரிவாளால் வெட்டிய அண்ணன்

பாலக்கோடு, ஏப்.9: பாலக்கோடு அருகே பசிகம் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேல். இவரது தம்பி பெரியசாமி. இவர்கள் இருவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. கடந்த 6ம் தேதி சட்டமன்ற தேர்தலின் போது, பெரியசாமி எக்காண்டஅள்ளி கிராமத்திலுள்ள பூத் எண்: 21ல் திமுகவிற்கு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு இருந்தார். இவரது அண்ணன் தங்கவேல், பாமகவில் உள்ளார். இந்நிலையில், பெரியசாமி திமுகவுக்கு வாக்கு சேகரித்து கொண்டிருந்தை பார்த்த தங்கவேல், எப்படி திமுகவிற்கு வாக்கு சேகரிக்கலாம் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் நேற்று காலை பெரியசாமி பால் ஊற்றுவதற்காக  எக்காண்டஅள்ளியில் உள்ள பால் பூத்துக்கு சென்றார். அப்போது தங்கவேல் இவரது மகன் முனியப்பன் மகள் சுசிலா ஆகியோர்  மறைந்திருந்து, அரிவாள் மற்றும் கடப்பாரையால் தாக்கியுள்ளனர்.இதில் பெரியசாமிக்கு தலை, உடலில் வெட்டு விழுந்தது. இதில் மயக்கமடைந்த பெரியசாமியை அங்கிருந்தவர்கள் மீட்டு, பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல், பெரியசாமி தாக்கியதாக, தங்கவேல், முனியப்பன், சுசிலா ஆகியோர் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து பெரியசாமி, தங்கவேல் அகிய இருவரும், பஞ்சப்பள்ளி போலீஸ் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: