செய்யாறு, ஏப்.9: செய்யாறு அருகே நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி கண்டறிய 30 பேரிடம் நேற்று ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது. தமிழகத்தில் கொரோனா காலகட்டத்தில் மனிதனுடைய நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதா என்பதை கண்டறிய ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதிகளில் இரண்டு கிராமங்கள் பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த கிராமப் பகுதியில் வசிக்கின்ற 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள், கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதவர்கள், தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் என பொதுவாக ரேண்டமாக தேர்வு செய்யப்பட்டு அவருடைய ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி செய்யாறு சுகாதார மாவட்டத்திற்குட்பட்ட நாவல்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சார்பில் நேற்று சடத்தாங்கல் கிராமத்தில் வட்டார மருத்துவர் ஏ.சி.சர்மிளா மேற்பார்வையில் சுகாதார ஆய்வாளர், சுகாதார செவிலியர்கள், லேப் டெக்னீசியன்கள் கொண்ட குழுவினர் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என வயது வித்தியாசமின்றி 30 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டது.