5 சட்டமன்ற தொகுதியில் 8 ஆயிரத்து 50 தபால் வாக்குகள் வந்தன கலெக்டர் தகவல் வேலூர் மாவட்டத்தில்

வேலூர், ஏப். 9: வேலூர் மாவட்டத்தில் 5 சட்டமன்ற தொகுதியில் 8 ஆயிரத்து 50 தபால் வாக்குகள் பதிவு செய்து வந்துள்ளதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து கலெக்டர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், இதர தேர்தல் பணியாளர்கள், வாக்குப்பதிவு மையங்களுக்கு சென்று வாக்களிக்க இயலாத மாற்றுத்திறனாளிகள், 80 வயதிற்கு மேற்பட்டோர் மற்றும் பாதுகாப்பு படையில் பணிபுரியும் வீரர்கள் ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் வழிகாட்டுதலின்படி மொத்தம் 20 ஆயிரத்து 61 தபால் வாக்குகள் சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன.

நேற்றைய தேதி வரை காட்பாடி தொகுதியில் 1,993 தபால் வாக்குகளும், வேலூர் தொகுதியில் 1,771 தபால் வாக்குகளும், அணைக்கட்டு தொகுதியில் 1,575 தபால் வாக்குகளும், கே.வி.குப்பம் தொகுதியில் 1,550 தபால் வாக்குகளும், குடியாத்தம் தொகுதியில் 1,221 தபால் வாக்குகள் என மொத்தம் 8 ஆயிரத்து 50 தபால் வாக்குகள் பதிவு செய்து வரப்பெற்றுள்ளன. தபால் வாக்கு சீட்டினை பெற்றுள்ள நபர்கள் தபால் வாக்கினை பதிவு செய்து வாக்கு எண்ணிக்கை நாளான வரும் 2ம் தேதி காலை 7.59 மணிக்குள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்து சேரும் வகையில் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அஞ்சலில் அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: