பண்ருட்டி, ஏப். 1: தமிழக வாழ்வுரிமை கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் ஆனந்த், வழக்கறிஞர்கள் சுந்தர்ராஜன், கோபிநாத் ஆகியோர் நேற்று பண்ருட்டி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மங்கலநாதனிடம் மனு ஒன்றை வழங்கினர். அதில் கூறியதாவது, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் எங்கள் கட்சியின் நிறுவன தலைவர் வேல்முருகன் போட்டியிடுகிறார். இந்தச்சூழ்நிலையில் பண்ருட்டி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பிரசாரமானது கடந்த 30.03.2021 மாலை 4 மணி வரை எவ்வித பிரச்னையுமின்றி அனைத்து கட்சி வேட்பாளர்களும் பிரசாரம் செய்து வந்தோம். இந்த நேரத்தில் 30.03.2021 மாலை 6 மணி அளவில் அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வந்த பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எங்கள் கட்சியின் வேட்பாளர் வேல்முருகனை தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை மீறி பண்ருட்டியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அசிங்கமாகவும், ஆபாசமாகவும் பேசி எங்கள் தலைவர் மீது தனி மனித தாக்குதல் செய்துள்ளார்.