புதுச்சேரி, ஏப். 1: சென்னை தண்டலம் பகுதியில் உள்ள பாலமுருகன் கோயில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. இதில் பங்கேற்பதற்காக புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை புதுவையிலிருந்து புறப்பட்டு சென்னை சென்றார். அவர் திண்டிவனம் - சென்னை பைபாஸ் சாலையில் படாலம் கூட்டு ரோடு அருகே சென்றபோது, வழியில் ஒருவர் வாலிபர் விபத்துக்குள்ளாகி ரத்த காயங்களுடன் இருந்தார். இதை பார்த்த கவர்னர், உடனே காரில் இருந்து இறங்கி, அந்த வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தார். பின்னர், கவர்னரின் பாதுகாப்பு வாகனத்தில் காவலர் ஒருவருடன் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அந்த வாலிபரை அனுப்பி வைத்தார். மேலும், மருத்துவரை தொடர்பு கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்தார்.