×

தமிழ்நாடு மின்வாரியத்தில் 700 உதவிப்பொறியாளர்களுக்கு பதவி உயர்வு: அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் உத்தரவு

 

சென்னை: தமிழ்நாடு மின்வாரியத்தில், 700 உதவிப் பொறியாளர்களுக்கு உதவி செயற்பொறியாளர் பதவி உயர்வு அளித்து அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மின்சார வாரிய கூடுதல் இயக்குநர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றி வந்த 700 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) இன்று (நேற்று) முதல் உதவி செயற்பொறியாளர்களாக (மின்னியல்) பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

முதல்வர் விஜய், எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் அறிவுறுத்தல் மற்றும் தொடர் கண்காணிப்பின் அடிப்படையில், தமிழ்நாடு மின்வாரியத்தில் வெளிப்படையான, மூப்பு மற்றும் தகுதி அடிப்படையிலான நிர்வாக நடைமுறைகள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய அளவில் பொறியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த பதவி உயர்வின் மூலம், மின்வாரியத்தின் களப்பணிகள் மேலும் வலுப்பெறுவதுடன், எதிர்வரும் பருவ மழைக்காலங்களில் மின் விநியோகம், பராமரிப்பு, புதிய மின் இணைப்புகள், துணை மின் நிலையங்களின் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பணிகள் கூடுதல் திறனுடனும், விரைவாகவும் மேற்கொள்ள இயலும்.

இப்பதவி உயர்வு பெற்றுள்ள பொறியாளர்கள், தமிழ்நாட்டின் மின்கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதிலும், பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் தரமான மின் விநியோக சேவையை வழங்குவதிலும் முக்கியப் பங்காற்றுவார்கள். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பதவி உயர்வு மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் அனைத்தும் வெளிப்படையான முறையில் விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை, தமிழ்நாடு மின்வாரியத்தில் பணியாற்றும் பொறியாளர்களின் தொழில் முன்னேற்றத்தை உறுதி செய்வதோடு, ஊழியர்களின் மன உறுதியையும், பணித் திறனையும் மேலும் உயர்த்தும் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Tamil Nadu Electricity Board ,Minister ,C.T.R. Nirmalkumar ,Chennai ,Tamil Nadu Electricity Board… ,
× RELATED ஜிஎஸ்எம் டிரான்ஸ்மீட்டர் கருவி மூலம்...