கந்தர்வகோட்டை, ஜூலை 31: கந்தர்வகோட்டை அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் பொய்யாக பெற்றோர்கள் மீது வழக்கு பதிந்ததாக கூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபடடனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகில் உள்ள வளவம்பட்டி கிராமத்தில் இந்து சமய அறநிலை துறைக்கு சொந்தமான மூங்கில அய்யனார் கோயில் தேர் திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி நடைபெற்றது. இரந்நிலையில், ஒரு தரப்பினர் 25ம் தேதி தங்களை தேர் இழுக்க அனுமதிக்கவில்லை எனக் கூறி தஞ்சை- புதுகை தேசிய நெடுஞ்சாலையில் வளவம்பட்டி பேருந்து நிறுத்தம் முன்பாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர் திருவிழா நடக்காது என உத்தரவாதம் கொடுத்த நிலையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டு கலைந்து சென்றனர். தொடர்ந்து, வளவம்பட்டி கிராமம் முழுவதும் 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சுந்தர்ராசு என்பவர் ஆதனக்கோட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் மற்றொரு தரப்பினர் பெண்கள் உள்ளிட்ட 41 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொய்யாக வழக்கு பதிவு செய்யப்பட்டதை கண்டித்து கிராம மக்கள் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வளவம்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 201 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வரும் நிலையில் 61 மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளிக்கு வந்தனர். அதேபோல் அங்கன்வாடி மையத்தில் 35 குழந்தைகள் பயின்று வந்த நிலையில் ஒரு குழந்தை மட்டுமே மையத்திற்கு வந்துள்ளது.
தகவலறிந்த கோட்டாட்சியர் பிரகாஷ், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பிருந்தா, வட்டாட்சியர் பரணி ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களிடம் நீங்கள் பள்ளி சென்று எங்களைப் போல் பெரிய அதிகாரியாக வரவேண்டும், இதுகுறித்து விசாரணை செய்துதான் நடவடிக்கை எடுக்கப்படும் எனவே நீங்கள் பள்ளிக்கு செல்லுங்கள் என்று மாணவர்களை பள்ளிக்கு அனுப்பவும், இந்த வழக்கு குறித்து உயர் அதிகாரிகளிடம் கூறி தீர்வு காண்பதாக கூறியதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை விட்டு கலைந்து சென்றனர்.
