×

ஓசூரில் அனுமதியின்றி கனிம வளங்களை கொண்டு சென்ற 6 லாரிகள் பறிமுதல்

 

ஓசூர், ஜூலை 30: ஓசூர் பகுதியில், அண்டை மாநிலங்களுக்கு அனுமதியின்றி கனிம வளங்களை கொண்டு சென்ற 6 லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்திலிருந்து, தமிழ்நாட்டின் அண்டை மாநிலங்களுக்கு கனிம வளங்களை கொண்டு செல்ல, மூன்று மாதங்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில், காவல் துறை, வருவாய்த் துறை, கனிமவளத் துறை மற்றும் போக்குவரத்துத் துறையைச் சேர்ந்த சிறப்பு புலனாய்வுக் குழுக்கள், அனைத்து எல்லை சோதனைச் சாவடிகளிலும் தீவிர வாகனச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். ஓசூர் வட்டம், கிருஷ்ணகிரி-ஓசூர் எல்லையில் அமைந்துள்ள ஜூஜூவாடி சோதனைச் சாவடியில், இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே போல், பாகலூர் அருகே கிருஷ்ணகிரி-கர்நாடகா எல்லையில் அமைந்துள்ள சம்பங்கிரி எல்லை சோதனைச் சாவடியில், இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தளி அருகே உள்ள கும்மளாபுரம் சோதனைச் சாவடியில், இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

Tags : Hosur ,Krishnagiri district ,Tamil Nadu… ,
× RELATED டூவீலரில் இருந்து தவறி விழுந்து பெண் பலி