×

காவிரியின் குறுக்கே கட்டுமானத்துக்கு கர்நாடகா பிற மாநிலங்களின் ஒப்புதல் பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறவில்லை: மாநிலங்களவையில் ஒன்றிய அரசு பதில்

 

புதுடெல்லி: மாநிலங்களவையில் பாமக அன்புமணி ராமதாஸ் எழுப்பியிருந்த கேள்விக்கு ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் ராஜ் பூஷன் எழுத்துப்பூர்வ பதிலை அளித்துள்ளார். அதில்,‘‘காவிரி நதியின் குறுக்கே எந்தவிதமான கட்டுமானத்தையும் மேற்கொள்வதற்காக கர்நாடகா அரசு தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரியின் ஒப்புதலை பெற வேண்டும் என்று 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பில் எங்கும் குறிப்பிடப்படவில்லை.

குறிப்பாக கடந்த 2018ம் ஆண்டு பிப்ரவரி 16ம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், காவிரி தீர்ப்பாயத்தின் 2007 தீர்ப்பின் பிரிவு 18-ஐ உறுதிப்படுத்தி உள்ளது. தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு முரணாக இல்லாத வகையில், மாநில எல்லைகளுக்குள் நீரைப் பயன்படுத்தவும், அதன் பயனை அனுபவிக்கவும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் அதிகாரம் உள்ளது என வலியுறுத்தியுள்ளது.

மேகதாது அணை மற்றும் குடிநீர் திட்டம் தொடர்பாக, கர்நாடகா 2019ம் ஆண்டு சமர்ப்பித்த விரிவான திட்ட அறிக்கையை, காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவு மற்றும் மத்திய நீர்வள ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப திருத்தம் செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு திட்ட அதிகாரிகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்துள்ளார்.

 

Tags : Supreme Court ,Karnataka ,Cauvery ,Union government ,Rajya Sabha ,New Delhi ,Union Minister of State for Water Resources ,Raj Bhushan ,PMK ,Anbumani Ramadoss ,Karnataka government ,Tamil Nadu ,Kerala ,Puducherry ,
× RELATED போராட்டம் வன்முறையாக மாறிய நிலையில்...