×

தடுப்பு வேலிகள், வழிகாட்டி போர்டுகள் அமைக்கப்படுமா?

 

குளத்தூர், ஜூலை 27: குளத்தூரில் குறுக்குச்சாலை, முள்ளூர், முத்துராமலிங்கபுரம் சாலைகள் சந்திக்கும் 3 சாலை சந்திப்பில் பாதுகாப்பு தடுப்புகள், வழிகாட்டி போர்டுகள் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. குளத்தூரில் இருந்து குறுக்குச்சாலை, முத்துராலிங்கபுரம், முள்ளூர் கிராமங்களுக்கு செல்லும் மூன்று வழிச்சாலை உள்ளது. இச்சாலை குளத்தூர் மேற்கு பகுதியில் இருந்து குறுக்குச்சாலை நெடுஞ்சாலையை ஒட்டிச்செல்லும் சாலைகளின் முகப்பு பகுதியில் எவ்வித தடுப்புகளும், அபாய எச்சரிக்கை குறியீடுகளும் இல்லாமல் உள்ளது. இதனால் குளத்தூரில் இருந்து வரும் வாகனங்கள் இச்சாலை பிரிவில் சிறிது ஸ்தம்பித்தே செல்கின்றன.

மேலும் குறுக்குச்சாலை செல்லும் சாலையும், முள்ளூர் செல்லும் சாலையும் ஒரே நேர்கோடாக மேற்கு நோக்கி செல்வதால் வெளியூர் வாகனங்கள், சுற்றுலா வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் வழி தெரியாமல் தவிப்பிற்குள்ளாகின்றனர். இச்சாலைகளையொட்டி குளத்தூர் தெற்குகண்மாய், நீர்வழி ஓடைகள் உள்ளதால் சாலையோர தடுப்புகள் கூட இல்லாமல் ஆபத்தான நிலையில் காட்சியளிக்கிறது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் சிரமங்களை கருத்தில் கொண்டு ஆபத்தான பகுதியாக உள்ள இச்சாலையின் முகப்பு பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kulathur ,Crossroads ,Mullur ,Muthuramalingapuram ,
× RELATED எல்நினோ பாதிப்பால் வறட்சி...