விழுப்புரம், ஜூலை 27: விழுப்புரத்தில் கஞ்சா போதையில் வாலிபரை கொல்ல முயன்ற 5 குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. விழுப்புரம் ஜிஆர்பி தெரு அருந்தயர் காலனி பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் (28) என்பவருக்கும், விஷ்ணு என்பவருக்கும் வாய் தகராறு ஏற்பட்ட நிலையில் அங்கிருந்த பொதுமக்கள் அவர்களை சமாதானம் பேசி அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் இதனை மனதில் வைத்துக்கொண்ட விஷ்ணு, அவரது நண்பர்கள் அபிஷேக், பரத்(எ) ராஜமாணிக்கம், கோகுல் உள்ளிட்ட 5 பேரும் சமாதானம் பேசுவதாக அருந்ததியர் தெரு அங்கன்வாடி அருகே அழைத்துச் சென்று பிரகாஷை சரமாரியாக கத்தியால் வெட்டி கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து உடல் முழுவதும் 25 தையல் போடப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்த பிரகாஷின் உறவினர்கள் ஆத்திரமடைந்து குற்றவாளிகளை கைது செய்ய கோரி நேற்று அதிகாலை விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் முன்பு திரண்டனர்.
காவல் நிலையத்தை முற்றுகையிட்ட அவர்கள் புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் எங்கள் பகுதியில் கஞ்சா போதையில் ஏற்பட்ட தகராறில் பிரகாஷை ஒரு கும்பல் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கொலை முயற்சி வழக்கில் பதிவு செய்யப்பட்டதாகவும், குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்யது தண்டனை பெற்று தருவதாக உறுதியளித்த பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
