×

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தினால் கேள்வி தாள் லீக் ஆவதை தடுக்க ஒன்றிய அரசு சட்டம் கொண்டு வருமாம்: கண்டன பொதுக்கூட்டத்தில் மாணிக்கம் தாகூர் பேச்சு

சென்னை: தமிழக காங்கிரஸ் சார்பில், மாணவர்களுக்கு எதிரான ஒன்றிய அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் தி.நகர் பேருந்து நிலையம் அருகே நேற்று நடைபெற்றது. பொதுக்கூட்டத்துக்கு, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தலைமை வகித்தார். மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது மிர் முன்னிலை வகித்தார். தவெக சார்பில் அமைச்சர் ராஜ்மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் சு.வெங்கடேசன் எம்பி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுப்பராயன் எம்பி, மதிமுக சார்பில் பொதுச் செயலாளர் வைகோ, விசிக சார்பில் அமைச்சர் வன்னியரசு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் நவாஸ் கனி எம்பி, காங்கிரஸ் அமைச்சர்கள் விஸ்வநாதன், ராஜேஷ்குமார், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் நிவேதித் ஆல்வா ஆகியோர் கண்டன உரையாற்றினர். காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் விளக்க உரையாற்றினார்.

முன்னதாக, ஒன்றிய அரசை கண்டித்து தமிழக காங்கிரஸ் எஸ்சி துறை தலைவர் ரஞ்சன் குமார் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. பொதுக்கூட்டத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் பேசியதாவது: இந்த 5 நாட்களில் டெல்லியில் நடந்த போராட்டத்தில் முக்கியமான விஷயம் என்னவென்றால், 20ம்தேதி நாடாளுமன்றம் அருகே நடந்த தடியடியும், அமித்ஷாவும், டெல்லி போலீசாரும் நடத்திய அட்டூழியம் தான். மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து தான் இந்த பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, அமித்ஷா கொடுத்த உத்தரவின் பேரில் போலீசார் செய்த வேலை தான் ெகாடுமையாக இருந்தது.

சமூக வலைதளங்களில் அவற்றை நாம் பார்த்திருப்போம். பெண்கள் மீது கொடூரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. மோடியும், அமித்ஷாவும் செய்த அட்டூழியம் என்பது டெல்லி வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாகிவிட்டது. ஜந்தர் மந்தரில் இப்படிப்பட்ட கொடுமை என்பது எப்போதுமே நடக்காத ஒன்று. அன்னா ஹசாரே, கெஜ்ரிவால் போராட்டம் இருந்த போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அவர்கள் மீது தாக்குதல் எதுவும் நடத்தவில்லை. 5 ஒன்றிய அமைச்சர்கள் அவர்களை சந்தித்து பேசினர்.

ஆனால் மோடியும், அமித்ஷாவும் என்ன செய்திருக்கிறார்கள் என்றால் மாணவர்களை அடித்து நொறுக்கி, பெண்களை இழிவுபடுத்தி, ஆடைகளை கிழித்து அவர்கள் செய்த அட்டூழியங்கள் அதிகம். நீட் என்பது தமிழகத்துக்கு எதிரானது என்று தொடர்ந்து போராடி வருகிறோம். ராகுல், அகிலேஷ் யாதவ் ஆகியோரை நடத்திய விதத்தை நாம் பார்த்தோம். அனைத்து தலைவர்களும் கண்டித்தனர். பாஜகவுக்கும், ஆர்எஸ்எஸ்சுக்கு எதிராக தொடர்ந்து போராடுவோம். அடுத்த வாரம் புதிய சட்டம் ஒன்று கொண்டு வரப்போகிறார்களாம். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் போராடினால் கேள்வித் தாள் லீக் ஆவதை தடுக்க சட்டம் கொண்டு வருவார்களாம். ஒன்றிய அரசை எதிர்த்து வரும் திங்கட்கிழமையும் போராட்டம் நடத்துவோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளோம்.இவ்வாறு அவர் பேசினார்.

பொதுக்கூட்டத்தில், மாநில துணை தலைவர்கள் கோபண்ணா, சொர்ணா சேதுராமன், மாநில பொதுச் செயலாளர்கள் சிரஞ்சீவி, தணிக்காச்சலம், அருள் பெத்தையா, எம்.எஸ்.காமராஜ், சென்னை மாநகராட்சி காங்கிரஸ் குழு தலைவர் எம்.எஸ்.திரவியம், மருத்துவர் அணி மாநில தலைவர் டாக்டர் கலீல் ரகுமான், ஓபிசி பிரிவு தலைவர் நவீன், துணை தலைவர் மயிலை தரணி, மாவட்ட தலைவர்கள் விஜய சேகர், கராத்தே செல்வம், ஜோதி பொன்னம்பலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : EU government ,Nead ,Manikam Tagore ,Kandana General Assembly ,Chennai ,Tamil Nadu Congress ,General Assembly ,Union Government ,Nagar bus station ,President ,Senior Officer ,Gulam Ahmed Mir ,
× RELATED அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்த...