புவனேஸ்வர்: நவீன்பட்நாயக் அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் முதல்வர் அலுவலகத்திலிருந்து 2 விசாரணை ஆணைய அறிக்கைகள் காணாமல் போனதாகக் கூறப்படும் விவகாரம் குறித்த விசாரணையின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டை சேர்ந்தவரும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும் அரசியல்வாதியுமான வி.கே. பாண்டியானை ஜூலை 25 அன்று உதவி ஆணையர் முன்பு ஆஜராகுமாறு ஒடிசா காவல்துறை ேநற்று சம்மன் அனுப்பியுள்ளது.
முதல்வர் அலுவலகத்திலிருந்து இரண்டு தனித்தனி விசாரணை ஆணையங்களின் அறிக்கைகள் காணாமல் போனதாகக் கூறப்படும் காலகட்டத்தில் (2024-ல்), அப்போதைய முதல்வர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராகப் பாண்டியன் பணியாற்றிக் கொண்டிருந்தார்.
எனவே இதுதொடர்பான விசாரணைக்கு ஒத்துழைக்கவும், வாக்குமூலம் அளிக்கவும் ஜூலை 25 அன்று காலை 11 மணிக்கு புவனேஸ்வர் நகர்ப்புற காவல் துறையின் மண்டலம்-1 உதவி ஆணையர் முன்பு ஆஜராகுமாறு அவர் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளார். மேலும், இவ்வழக்கு தொடர்பான ஆவணங்கள், பதிவுகள், மின்னணு சாதனங்கள் அல்லது பிற பொருட்கள் ஏதேனும் அவரிடம் அல்லது அவரது கட்டுப்பாட்டில் இருந்தால், அவற்றையும் எடுத்து வருமாறு பாண்டியன் அறிவுறுத்தப்பட்டுள்ளார்.
