நாகர்கோவில்: குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள பகுதியை சேர்ந்த 36 வயதான ஆசிரியை, மதுரை உயர்நீதிமன்ற கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: நான், தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறேன். எனது கணவர் டெம்போ டிரைவராக உள்ளார். நான் எனது வீட்டின் குளியல் அறையில் குளித்துக் கொண்டிருந்த போது, அதே பகுதியை சேர்ந்த ஜெயகாந்தன் என்பவர் ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்தார்.
இதை கவனித்து நான் கூச்சலிட்டதும், அவர் தப்பினார். பின்னர் என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டினார். இதுகுறித்து நான் யாரிடமும் கூறவில்லை. இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டு, நான் தனியாக இருக்கும்போது ஒரு நாள் எனது வீட்டுக்குள் வந்த ஜெயகாந்தன் அந்த வீடியோவை என்னிடம் காட்டி, நான் சொல்வது போல் கேட்க வேண்டும் என கூறி மிரட்டி, என்னுடன் உடலுறவில் ஈடுபட்டார். அதன் பிறகு பலமுறை வீடியோவை அழித்து விடுவதாக கூறி நம்ப வைத்து உடலுறவு கொண்டார்.
அதையும் எனக்கு தெரியாமல் ரகசியமாக வீடியோ எடுத்துள்ளார். அது மட்டுமின்றி என்னிடம் இருந்து ரூ.47 ஆயிரம் வரை பணமும் வாங்கினார். இந்நிலையில் ஜெயகாந்தன் வெளிநாடு சென்றார். அந்த சமயத்தில், அவரது நண்பர் ஜெகன் என்பவர் வந்து மேற்கண்ட சம்பவத்தை கூறி பலமுறை என்னை மிரட்டி பலாத்காரம் செய்தார். இதுபற்றி நான் எனது கணவரிடம் தெரிவித்தபோது, அவர் இது குறித்து கேட்டார். அவரையும் இருவரும் மிரட்டினர். எனவே இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என கூறி இருந்தார்.
இதையடுத்து சம்பந்தப்பட்ட காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தக்கலை போலீசார் தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், பலாத்காரம், மறைத்து வீடியோ எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் ஜெயகாந்தன், ஜெகன் ஆகிய 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக போலீசாரிடம் கேட்டபோது, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து உள்ளோம். விசாரணைக்கு பின்னரே இந்த சம்பவம் தொடர்பான விபரங்களை கூற முடியும் என்றனர்.
