அரியலூர்,ஜூலை 21: காவனூர் அடுத்த அய்க்கால் கிராம மக்கள் தங்களது பகுதிக்கு குடிநீர் கேட்டு, காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அரியலூர் மாவட்டம் அய்க்கால் கிராமத்தில், பொதுக் குழாய்களில் கடந்த 40 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தையடுத்து லாரி மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. ஆனாலும் அந்த குடிநீர் போனதாக இல்லை என்று தெரிவித்து வந்தனர்.
இதனால் குடிநீருக்காக அவதிப்பட்டு வந்த பொதுமக்கள், காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர். அப்போது நூழைவு வாயில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, 5 பேர் மட்டுமே மனு அளிக்க அனுமதித்தனர். போலீசாரின் அறிவுரையை அடுத்து பொதுமக்கள் சார்பாக 5 பேர் மனு அளித்தனர். மனுவை பெற்றுக் கொண்ட கலெக்டர் மிருணாளினி கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
