×

இரூர் கிராமத்தில் உள்ள காரை பிரிவு சாலை பகுதியில் நிழற்குடை அமைக்கப்படுமா?

 

பாடாலூர், ஜூலை 20: பாடாலூர் அருகே ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் உள்ள காரை பிரிவு சாலைப் பகுதியில் பேருந்திற்காக காத்திருக்கும் பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் நிழற்குடை அமைக்கப்பட வேண்டும் என்று பயணிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா இரூர் கிராமத்தில் உள்ள காரை பிரிவு சாலை பகுதியில் காரை, தெரணி, கொளக்காநத்தம், கொளத்தூர், அயினாபுரம், அணைப்பாடி, அரியலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் செல்வதற்கான பேருந்து நிறுத்தம் உள்ளது. இந்த சாலையில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் ஆலத்தூர் தாலுகா அலுவலகம், ஆலத்தூர் ஒன்றிய அலுவலகம், வட்டார வேளாண்மை அலுவலகம், ஐ.ஓ.பி வங்கி என்பது உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் பல்வேறு பணிகளுக்காக ஆலத்தூர் தாலுகா கிழக்கு பகுதியில் உள்ள காரை, தெரணி, கொளக்காநத்தம், கொளத்தூர், அயினாபுரம், இலுப்பைக்குடி, கூடலூர் உள்ளிட்ட பல்வேறு கிராம பொது மக்களும், மேற்கு பகுதியில் உள்ள நாட்டார்மங்கலம், கூத்தனூர், செட்டிகுளம், குரூர், சிறுவயலூர், நக்கசேலம், மங்கூன், டி.களத்தூர், மாவிலிங்கை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும் நாள்தோறும் வந்து செல்ல வேண்டும். மேலும் மேற்கண்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பெரம்பலூர், திருச்சி உள்ளிட்ட பிற நகரங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் இந்த பகுதிக்கு வந்து தான் செல்ல வேண்டும்.

இதுபோல் பல்வேறு பயன்பாட்டுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் இந்த பகுதியில் பயணிகள் பேருந்திற்காக காத்திருக்கும் போது அமர்ந்து செல்லும் வகையில் பயணிகள் நிழற்குடை வசதி இல்லை. இதனால் பயணிகள் காத்திருக்கும் போது வெயில் மழை காலங்களில் மிகவும் அவதிப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அந்த பகுதியில் பயணிகள் அமர்ந்து செல்லும் வகையில் பயணிகள் நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும். பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Tags : Karai Division Road ,Irur ,Patalur ,Alathur taluka ,Perambalur ,
× RELATED கே.வி.குப்பம் அருகே ரத்த கறை பையுடன்...