அரியலூர், ஜூலை 18: யுஏடி2.0 திட்டத்தை கைவிடக்கோரி அரியலூரில் தமிழ்நாடு தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் கூட்டமைப்பு சார்பில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரியலூர் அண்ணாசிலை அருகே பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தோட்டக்கலை அலுவலர்கள் கூட்டமைப்பினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் உழவர் அலுவலர் தொடர்புத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். தோட்டக் கலை மற்றும் பட்டயதார்களின் எதிர்கால வாழ்வாதாரத்தை பாதிக்கக் கூடிய யுஏடி2.0 திட்டத்தை கைவிட வேண்டும்.
வல்லுநர்குழு, சம்பந்தப்பட்ட துறையின் ஒப்புதல் இல்லாமல் செயல்படுத்தப்பட்ட யுஏடி2.0 திட்டத்தையும் ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மோகன்ராஜ், பிரகாஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். ஜெயங்கொண்டம் தோட்டக் கலைத்துறை உதவி இயக்குநர் பவித்ரா கண்டன உரையாற்றினார். சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.
