விருதுநகர்: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம்தாகூர் எம்பி, விருதுநகரில் நேற்று அளித்த பேட்டி: லஞ்சமில்லாத தமிழகத்தை உருவாக்குவதற்கான தொடக்கப்பணிகளை முதலமைச்சர் விஜய் தலைமையிலான இந்த அரசு மிகச் சிறப்பாக முன்னெடுத்துள்ளது. தற்போதைய புதிய அரசு அமைந்து 60, 70 நாட்கள்தான் ஆகிறது. தூய்மையான நிர்வாகத்தைக் கொண்டுவர முதலமைச்சர் விஜய் மிக உயர்ந்த லட்சியத்தோடு தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
கீழ்மட்ட நிர்வாகி ஒருவர் செய்யும் தவறை, ஒட்டுமொத்தத் தலைவரின் உயர்ந்த கொள்கையோடு ஒப்பிடக் கூடாது. தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது இந்த அரசு சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கும். தேர்தலுக்கு முன்பும் பின்பும் பல கட்சிகளில் இருந்தும் தவெகவிற்கு ஆட்கள் உள்ளே வந்திருப்பதால், அவர்களின் பழைய லஞ்ச பழக்கவழக்கங்கள் மாறுவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கும். இவ்வாறு தெரிவித்தார்.
‘கட்சியை அழிப்பதில் கிளாசிக் எக்ஸாம்பிள்தான் எடப்பாடி’
‘‘எம்ஜிஆர் இரவு பகல் பாராமல் கஷ்டப்பட்டு வளர்த்த இயக்கம் அதிமுக. ஜெயலலிதாவும் பல சோதனைகளை கடந்து அந்த இயக்கத்தை காப்பாற்றினார். ஆனால் அப்படிப்பட்ட ஒரு மாபெரும் பேரியக்கத்தை எப்படி எல்லாம் சிதைத்து, ஒட்டுமொத்தமாக அழிக்க முடியும் என்பதற்கு ஒரு கிளாசிக் எக்ஸாம்பிள்தான் எடப்பாடி பழனிசாமி. 2016ல் தொடங்கி 2026 தேர்தல் வரை அதிமுகவை 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் டெபாசிட் இழக்கச் செய்த பெருமை அவரையே சாரும்.
ஒரு கட்சியை எப்படி அழிக்க வேண்டும் என்று யாராவது பிஎச்டி ஆராய்ச்சி செய்தால், அதில் எடப்பாடி பழனிசாமிதான் முதன்மை கதாபாத்திரமாக இருப்பார். அவர் அடுத்தவர்களை விமர்சிப்பதை விடுத்து, முதலில் தன் கட்சியை பிழைக்க வைக்கும் வழியை பார்க்கட்டும்’’ என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்து உள்ளார்.
