மெரினாவில் தூய்மை பணி: சுழற்சி முறையில் தினமும் 152 பணியாளர்கள்

 

சென்னை: சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கடற்கரைப் பகுதிகளை பொதுமக்களின் பொழுதுபோக்கிற்கு உகந்த வகையில் மேம்படுத்திட மாநகராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில், மெரினா கடற்கரை. பெசன்ட் நகர், திருவான்மியூர், பாலவாக்கம், நீலாங்கரை, அக்கரை, திருவொற்றியூர் கடற்கரை பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் கொண்டு நாள்தோறும் சுழற்சி முறைகளில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, மெரினாவில் உள்ள 2 நீலக்கொடி கடற்கரைத் திட்டப் பகுதிகள் உள்ளிட்ட கடற்கரைப் பகுதிகளில் நாள்தோறும் பெரும்பாலான பொதுமக்கள் பொழுதுபோக்கிற்காக வந்து செல்கின்றனர். மேலும், வார இறுதி நாட்களில் இங்கு நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகிறது. இதனால் இந்த பகுதிகளை தூய்மையாக பராமரிக்கும் வகையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் இயந்திரங்கள் மூலம் நாள்தோறும் சுழற்சி முறையில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுப்படுகிறது. இந்த தூய்மைப் பணிகளில் 3 சுழற்சி முறைகளில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் என மொத்தம் 152 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும், கடற்கரை சுத்தம் செய்யும் 9 இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் பயன்படுத்தப்படுகிறது.

தலா 20 ஏக்கர் பரப்பளவில் 2 நீலக்கொடி கடற்கரை திட்டப் பகுதிகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது திட்டம் 3க்கான பணிகள் முடிவுறும் தருவாயில் உள்ளது. திட்டம் 4மற்றும் 5க்கான பணிகள் நடைபெற்று வருகிறது. நீலக்கொடி கடற்கரைப் பகுதியில் பசுமைப் பரப்பை அதிகரிக்கும் வகையில் 650 நாட்டு மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளது. கடற்கரைப் பகுதிகளை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிப்பது அனைவரின் பொது பொறுப்பாகும்.

கடற்கரைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள், உணவுப் பொருள், எச்சங்கள் உள்ளிட்ட எந்த விதமான கழிவுகளையும் மணற்பரப்பில் கொட்டுவதைத் தவிர்த்திட வேண்டும். கடற்கரைப் பகுதிகளுக்கு வருகை தரும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அனைவரும் தங்களது குப்பைக் கழிவுகளை, அதற்காக வைக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட்டு, மாநகராட்சியின் தூய்மைப் பணிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

Related Stories: