ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து வழக்கு அமைச்சர் மரிய வில்சனுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சென்னை: ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்கில் தமிழக அமைச்சர் மரிய வில்சன் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட மரிய வில்சன் வெற்றி பெற்றா்ர. இவரது தேர்தல் வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரி அந்த தொகுதி வாக்காளர் மருது கணேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதேபோல், திருவெறும்பூர் தொகுதியில் தவெக எம்எல்ஏ நவல்பாட்டு விஜி என்கிற எஸ்.விஜயகுமார் வெற்றியை எதிர்தது திமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ், திண்டுக்கல் தொகுதியில் திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியின் மகனான ஐ.பி.செந்தில்குமாரின் வெற்றியை எதிர்த்து தவெக வேட்பாளர் நாசிர் ராஜா ஆகியோர் தேர்தல் வழக்குகளை தொடர்ந்திருந்தனர்.

திருவள்ளூர் தொகுதி தவெக எம்எல்ஏ டி.அருண்குமார் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரனும், மொடக்குறிச்சி தொகுதி தவெக எம்எல்ஏ டி.சண்முகம் வெற்றியை எதிர்த்து வாக்காளர் கே.பெரியசாமியும், பர்கூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஆர்.சி.கோவிந்தராஜன் வெற்றியை எதிர்த்து வாக்காளர் சி.கீதா என்பவரும் தேர்தல் வழக்குகளை தொடர்ந்திருந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, தேர்தல் வழக்குகள் தொடர்பாக அமைச்சர் மரிய வில்சன் உள்ளிட்ட 6 எம்எல்ஏக்களும் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்துள்ளார்.

இதேபோல, கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக நிர்வாகியும், அமைச்சருமான செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து அதிமுகவை சேர்ந்த வி.பி.பிரபு தேர்தல் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இவை உள்ளிட்ட தேர்தல் வழக்குகளை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், வழக்குகளை வெவ்வேறு தேதிகளுக்கு தள்ளிவைத்தார். மேலும், தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள தேர்தல் வழக்குகள் ஒவ்வொரு புதன்கிழமையும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Related Stories: