டெல்லி: பகவான் ராமர் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் என இரண்டுக்குமே பாஜக துரோகம் இழைத்துவிட்டதாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் குற்றம் சாட்டியுள்ளார். அயோத்தி ராமர் கோவிலுக்கு நன்கொடையாக வந்த பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டதாக எழுந்துள்ள பெரும் சர்ச்சை குறித்து லக்னோவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அகிலேஷ் யாதவ் இவ்வாறு குற்றம்சாட்டி உள்ளார்.
ராமர் கோவிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய தங்கம், வெள்ளி, வைரம் மற்றும் நகைகள் திருடப்பட்ட செய்தி நாட்டின் ஒவ்வொரு கிராமத்தையும் சென்றடைந்துள்ளது என்றும், இதனால் பக்தர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர் என்றும் கூறினார். இனிமேல் பாஜக-வுக்கு காணிக்கையும் கிடைக்காது, வாக்குகளும் கிடைக்காது’ என்றார். “மரியாதை மற்றும் நெறிமுறை” என்ற சொல்லுக்கு முதல் பெயர் ராமர், இரண்டாவது பெயர் இந்திய அரசியலமைப்பு. ஆனால், பா.ஜ.க இந்த இரண்டையுமே மதிக்காமல் துரோகம் செய்துவிட்டது என்று அகிலேஷ் யாதவ் சாடினார். நன்கொடை பணம் எண்ணும் சிசிடிவி காட்சிகள் ஏன் காணாமல் போயின..? கோயில் பணம் அரசியல் நிதிக்குத் திருப்பி விடப்பட்டதா என்று சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
இதனிடையே இந்த விவகாரம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராமர் கோயிலில் கோடிக்கணக்கான ரூபாயை கொள்ளை அடித்துள்ளனர். ராமரின் நாமத்தை உச்சரித்தே திருடியுள்ளார்கள் என்று குற்றஞ்சாட்டி உள்ளார்.
