காரைக்கால்: மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு நீலகண்டேஸ்வரர் கோயிலில் திருடப்பட்ட 5 சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன. இதுதொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.காரைக்கால் தர்மபுரம் கீழத்தெருவில் சந்தேகப்படும் வகையில் கோயில் சிலைகள் வைத்திருப்பதாக நகர போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றபோது அங்குள்ள வீட்டில் காரைக்கால் அடுத்த தர்மபுரம் கீழத்தெருவை சேர்ந்த அபிராமசுந்தரம்(44), நாகை மாவட்டம் கீழ்வேளூர் ரயிலடி தெருவை சேர்ந்த ஷாஜகான்(46) ஆகியோர் இருந்தனர்.
அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர். இதைதொடர்ந்து நடத்திய விசாரணையில், அவர்களது வீட்டில் 5 சிலைகள் வைத்திருந்தது தெரியவந்தது. அவை சட்டபூர்வமாக வைத்திருப்பதற்கான ஆவணம், விளக்கம் அளிக்க தவறியதால் அவை திருடப்பட்ட சிலைகளாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டது. விசாரணையில் அந்த சிலைகள் மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு அடுத்த இலுவப்பட்டு நீலகண்டேஸ்வரர் கோயிலில் இருந்து திருடப்பட்ட பழமையான சிலைகள் என தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிநது 2 பேரையும் கைது செய்ததுடன் 5 சிலைகள் மற்றும் அவற்றை கொண்டு செல்ல பயன்படுத்திய கார், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.மேலும் இந்த வழக்கை தமிழக போலீசார், காரைக்கால் போலீசார் இணைந்து பறிமுதல் செய்யப்பட்டது ஐம்பொன்னா அல்லது வெண்கல சிலைகளா, இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.
