×

கொல்லிமலையில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

 

சேந்தமங்கலம், ஜூலை 6:கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள், அருவிகளில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சிறந்த சுற்றுலா தலமாக இருந்து வருகிறது. தமிழகம் மட்டுமல்லாமல் அண்டை மாநிலமான ஆந்திரா, கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லிமலையில் சாரல் மழை விட்டு, விட்டு பெய்து வந்தது. கேரளாவில் மழை பெய்து வருவதால், இங்கு பலத்த காற்று வீசி வருகிறது. இதனால் சீதோசன நிலை மாறி குளிர் நிலவி வருகிறது. சில்லென்று குளிர் காற்று வீசுகிறது. பல்வேறு பகுதிகளில் மேகமூட்டம் மலைகளில் தவழ்ந்து செல்லும் காட்சி சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கின்றது. காலை நேரங்களில் சாலைகளில் கடுமையான பனி இருந்து வருகிறது.

விடுமுறை தினமான நேற்று, கொல்லிமலைக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். சென்னை ஹைதராபாத், பாண்டிச்சேரி, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் டூவீலரில் வந்திருந்தனர். போதிய மழை இல்லாததால் ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி, மாசிலா அருவி, சினி பால்ஸ், நம் அருவி ஆகியவற்றில் லேசாக தண்ணீர் கொட்டுகிறது. இதில் குளித்து மகிழ்ந்தனர். பிரசித்தி பெற்ற அறப்பளீஸ்வரர் கோயில், எட்டுக்கை அம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு தாவரவியல் பூங்கா, சிக்குப்பாறை காட்சிமுனையம் உள்ளிட்ட பகுதிகளில் இயற்கை அழகை சுற்றி பார்த்துவிட்டு வாசலூர்பட்டி ஏரியில் குடும்பம் குடும்பமாக குழந்தைகளுடன் படகு சவாரி செய்தனர். மாலை வீடு திரும்பும் பொழுது சோளக்காடு, தெம்பளம், திண்டு பகுதிகளில் உள்ள பழச்சந்தையில் அன்னாசி, பலா, மலை வாழை, கொய்யா, கமலா ஆரஞ்சு, தேன், மிளகு கொல்லிமலை விளைபொருட்களை வாங்கி சென்றனர்.

Tags : Kollimalai ,Senthamangalam ,Namakkal district ,Tamil Nadu ,Andhra Pradesh ,Kerala ,Karnataka ,Pondicherry… ,
× RELATED அதிகாரிகள் இரவில் திடீர் சோதனை:...