* மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்
சென்னை: சென்ட்ரல் மற்றும் மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையங்களில் மேம்படுத்தப்பட்ட நவீன கழிவறைகள் பயணிகள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன. சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் பி5 நுழைவாயில் அருகே (கட்டணம் இல்லாத பொது பகுதியில்) அமைந்துள்ள பயணிகள் கழிப்பறைகள் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டு, நவீன சுகாதார வசதிகளுடன் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொண்டுள்ள இந்த மேம்பாட்டுப் பணியின் மூலம், கழிவறை அறைகள், சிறுநீர் கழிப்பிடங்கள் மற்றும் கை கழுவும் இடங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களின்படி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் எவ்வித சிரமமுமின்றி எளிதாகப் பயன்படுத்தும் வகையில் பிரத்யேக நவீன கழிப்பறைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
இந்த புதுப்பிக்கப்பட்ட நவீன கழிப்பறைகளில் தானியங்கி சென்சார் குழாய்கள், சென்சார் சோப்பு திரவம் வழங்கி, சென்சார் கை உலர்த்திகள், குழந்தைகளுக்கான டயப்பர் மாற்றும் வசதி, சிறுவர்களுக்கான பிரத்யேக கை கழுவும் தொட்டிகள் மற்றும் சிறுநீர் கழிப்பிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் சக்கர நாற்காலியில் வரும் பயணிகளும் பாதுகாப்பாக பயன்படுத்தும் வகையில் கழிவறைகள், வழுக்காத கைப்பிடிகள், நடப்பதற்கு வசதியான தொடு உணர் தரைத்தளங்கள், பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கான பிரெய்லி வழிகாட்டி பலகைகள், சாய்வுதளப் பாதைகள், 180 டிகிரி சுழலும் கதவுகள் மற்றும் அவசர கால எச்சரிக்கை அலாரம் போன்ற சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இவற்றுடன் டிஸ்யூ பேப்பர், பைகளை வைப்பதற்கான இடங்கள், சிறந்த வெளிச்சம் மற்றும் காற்றோட்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள், குழந்தைகள் மற்றும் அவர்களை அழைத்து வருவோர் உட்பட அனைத்துப் பயணிகளும் முழு பாதுகாப்புடனும், சுகாதாரத்துடனும், வசதியாகவும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையத்திலும் மேம்படுத்தப்பட்ட நவீன கழிவறைகள் பயணிகள் பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டுள்ளன. அங்கு நடைமேடை 2ன் கட்டண பகுதியில் அமைந்துள்ள கழிப்பறை, கூடுதல் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் மெட்ரோ பயணிகள் அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி, இன்னும் எளிதாகவும் வசதியாகவும் இந்த சுகாதார வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் மீனம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் மேம்படுத்தப்பட்ட இந்த நவீன கழிப்பறை வசதிகள் நேற்று பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளன.
கழிப்பறை புதுப்பித்தல் திட்டத்தின் ஒரு பகுதியாக, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தின் மற்றொரு பகுதி (ஏ3 நுழைவாயில் அருகே), உயர் நீதிமன்றம் மெட்ரோ, திருமங்கலம் மெட்ரோ மற்றும் சென்னை விமான நிலையம் மெட்ரோ ஆகியவற்றிலும் இதுபோன்ற நவீனப்படுத்தும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மேம்படுத்தப்பட்ட இந்த வசதிகள் அனைத்தும் இன்னும் சில மாதங்களில் முழுமையாக நிறைவடைந்து, பயணிகள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ ரயில் கட்டமைப்பு முழுவதும் உலகத்தரம் வாய்ந்த, சுகாதாரமான மற்றும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் ஏற்ற வசதிகளைத் தொடர்ந்து வழங்குவதில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பில், இந்தத் திட்டம் மற்றுமொரு முக்கிய சான்றாகும், என மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
