புதுடெல்லி: காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசினால் அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு தசாப்த கால பழமையான மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்திற்கு மாற்றாக விபி ஜி ராம் ஜி சட்டம் நாடு முழுவதும் நேற்று அமல்படுத்தப்பட்டது. ஆனால் இந்த திட்டத்தில் ஊதியம் நியாயமற்ற முறையில் குறைக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில், ”மோடி அரசின் புதிய சட்டத்தில் உள்ள அநீதி ஒருபுறம் இருக்க, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியமும் நியாயமற்ற வகையில் குறைவாக உள்ளது. பெரும்பாலும் ஒரு நாளைக்கு ரூ.300மட்டுமே.
மோடி அரசினால் அமைக்கப்பட்ட அனுப் சத்பதி தலைமையிலான நிபுணர் குழுவும் 2019ம் ஆண்டிலேயே தேசிய அளவிலான குறைந்தபட்ச ஊதியத்தை ஒரு நாளைக்கு ரூ.375ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருந்தது. நியாயமான குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பதில் இந்த பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும். மேலும் அப்போதில் இருந்து ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வையும் அரசு கணக்கில் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.
