×

நீர் நிலைகள் புனரமைப்பு பணிகளுக்கு இ-டெண்டர் முறை கட்டாயம்: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை: நீர்நிலைகள் புனரமைப்பு பணிகளுக்கு இ-டெண்டர் முறையில் தான் கட்டாயம் நடத்த வேண்டும் என அமைச்சர் ஆனந்த் உத்தரவிட்டு அதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளார். ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் சுமார் 22,051 சிறுபாசன ஏரிகள் மற்றும் 69,777 குளங்கள் மற்றும் ஊரணிகள் உள்ளன. சிறுபாசன ஏரிகள் ஊராட்சி ஒன்றியங்களின் உரிமையிலும் பராமரிப்பிலும் உள்ளன. குளங்கள் மற்றும் ஊரணிகள் கிராம ஊராட்சிகளால் பராமரிக்கப்படுகின்றன. இந்நீர்நிலைகள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், மாநில நிதியில் செயல்படுத்தப்படும் சிறுபாசன ஏரிகள் புனரமைப்புத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களின் மூலம் புனரமைக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் நீர்வளத்துறைசார்பில் முக்கிய சில வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன் விவரம் பின்வருமாறு:
பணி வரம்பு
* நீர்நிலைகளில் வண்டல் மண் அகற்றுதல் மற்றும் ஆழப்படுத்துதல்.
* நீர்வரத்து, உள்வாய் (Inlet) மற்றும் வெளிவாய் கால்வாய்களில் வண்டல் மண் அகற்றி புனரமைத்தல்.
* நீர்நிலைகள் மற்றும் கரைகளில் வளர்ந்துள்ள காடுகள், புதர்கள், செடிகள் மற்றும் ஆக்கிரமிப்பு தாவரங்களை அகற்றுதல்.
* கரைகளை வலுப்படுத்துதல், உரிய வடிவமைப்பிற்கு கொண்டுவருதல் மற்றும் உறுதிப்படுத்துதல்.
பணிகள் தேர்வு
கடந்த மூன்று ஆண்டுகளில் பின்வரும் திட்டங்கள் அல்லது நிதி ஆதாரங்களின் கீழ் ஏற்கெனவே புனரமைக்கப்பட்ட நீர்நிலைகள் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட மாட்டாது. அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் , மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் , மாநில நிதியின் கீழ் சிறுபாசன ஏரிகள் புனரமைப்புத் திட்டம், நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதி , தன்னார்வ அமைப்புகள் அல்லது வேறு எந்த நிதி ஆதாரத்தின் மூலமாகவும் புனரமைக்கப்பட்டிருந்தால் அவை தகுதியற்றதாகக் கருதப்படும்.
செயல்படுத்தும் முறைகள்
* நீர்நிலையை புனரமைக்க விரும்பும் பெருநிறுவனங்கள், நிறுவனங்கள், தன்னார்வ அமைப்புகள், சமூக அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரிடம் விரிவான திட்ட அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.
* மாவட்ட ஆட்சியர், கள ஆய்வு மற்றும் தொழில்நுட்ப பரிசீலனைக்காக சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு அனுப்புவார்.
* முன்மொழியப்பட்ட நீர்நிலையினை வட்டார வளர்ச்சி அலுவலர் கள ஆய்வு செய்து, முன்மொழிவு பெறப்பட்ட நாளிலிருந்து 15 நாட்களுக்குள், அதனை ஏற்றுக்கொண்டு அல்லது குறிப்பிட்ட கருத்துகள் மற்றும் குறிப்புரைகளுடன் திருப்பி அனுப்பும் வகையில், தனது பரிந்துரைகளை திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் மாவட்ட ஆட்சியருக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
* இப்பரிந்துரையின் அடிப்படையில், மாவட்ட ஆட்சியர் 7 நாட்களுக்குள் தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும்.
* பணிகளை நிறைவேற்றுவதற்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதலை துறை வழங்கும்.
* அதன் பின்னர் மாவட்ட ஆட்சியருக்கும் நிறுவனங்கள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.
* தடையில்லாச் சான்றிதழ் வழங்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டவுடன் நிதியுதவி வழங்கும் பணிகளை உடனடியாகத் தொடங்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தம் செயல்படுத்தப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்.
* பருவமழை தொடங்கும் முன்பே அனைத்து பணிகளும் நிறைவு பெறும் வகையில் செயல்படுத்தும் கால அட்டவணை திட்டமிடப்பட வேண்டும். இதன் மூலம், பாதகமான வானிலை காரணமாக ஏற்படும் தாமதங்கள் தவிர்க்கப்பட்டு, மழைநீரை திறம்பட சேமித்து பாதுகாக்கும் நடவடிக்கைகள் உறுதி செய்யப்பட வேண்டும்.
ஒப்பந்தப்புள்ளி
சிறுபாசன ஏரிகள் புனரமைப்புப் பணிகள், தமிழ்நாடு ஒப்பந்தப்புள்ளிகளில் வெளிப்படைத்தன்மை சட்டத்தின்படி அனைத்து பணிகளுக்கும் மின்னணு ஒப்பந்தப்புள்ளி (இ-டெண்டர்) முறை கட்டாயமாகப் பின்பற்றப்படும்.
இவ்வாறு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : Chennai ,Minister ,Anand ,
× RELATED பொது இடங்களில் மாடு வெட்டுவதற்கு...