ஸ்ரீவில்லிபுத்தூர், ஜூலை 1: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே, கோயில் உள்ள உண்டியலை உடைத்து வாலிபர், திருட முயன்ற சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலையில் பிள்ளையார் கோவில் உள்ளது. இந்த கோயிலில் திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த முருகன் (42) என்பவர் இரவு நேர காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று இரவு, அதே பகுதியை சேர்ந்த அரவிந்தன்(24) என்பவர், கோயில் முன்பு உள்ள உண்டியலை உடைக்க முயன்றாக கூறப்படுகிறது. இதனை முருகன் தட்டி கேட்டதாகவும், இதனால் வாக்குவாதம் ஏற்பட்டு அவரை, அரவிந்தன் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து முருகன் அளித்த புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
