இடைப்பாடி, மார்ச் 9: இடைப்பாடி சட்டமன்ற தொகுதி ஆய்வு கூட்டம் மற்றும் பயிற்சி முகாம் நேற்று நடந்தது. இடைப்பாடி சட்டமன்ற தொகுதி ஆய்வு கூட்டம் மற்றும் பயிற்சி முகாம், இடைப்பாடி தாலுகா அலுவலகத்தில் நேற்று நடந்தது. இடைப்பாடி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் தனலிங்கம் தலைமை வகித்தார். தாசில்தார் முத்துராஜா, தனி தாசில்தார் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் திமுக நகர செயலாளர் பாஷா, திமுக ஒன்றிய செயலாளர்கள் பரமசிவம், நல்லதம்பி, காங்கிரஸ் அசோக்குமார், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் கதிரேசன், அதிமுக நகர செயலாளர் முருகன், ராஜேந்திரன், மாதேஸ்வரன் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திமுக நகர செயலாளர் பாஷா, ஒன்றிய செயலாளர் பரமசிவம் ஆகியோர் கூறுகையில், ‘80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, வாக்காளர் பட்டியல் எடுத்துக்கொண்டு ஆளுங்கட்சியினர் பகுதிவாரியாக செல்கிறார்கள். தனி ஒரு பட்டியல் ஆளுங்கட்சியினருக்கு உள்ளது போல், எங்களுக்கும் கொடுங்கள் என கேட்டோம். அதற்கு தேர்தல் அலுவலர், நாங்கள் யாருக்கும் தரவில்லை என கூறினார். அப்போது வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தில் இருந்து வரப்படுகிறது,’ என்றனர். மேலும், இடைப்பாடி தொகுதி வாக்குகள், தற்போது சங்ககிரி தனியார் கல்லூரியில் எண்ணப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சிக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்படுவது போல் தெரிகிறது. இதுபற்றி மற்ற கட்சி நிர்வாகிகளிடம் கேட்காமல் அறிவித்துள்ளனர்’ என்றனர்.