சேலம், மார்ச் 9: சேலம் மாவட்டத்தில் கோடையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சேலத்தில் நேற்று 98.7 டிகிரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. மதிய வேளையில் அனல் காற்று வீசியதால், சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்தது. மேலும், பெரும்பாலான மக்கள் வெளியில் நடமாடுவதை தவிர்த்து வீடுகளில் முடங்கினர். உஷ்ணத்தால் உடல் வெப்பநிலை அதிகரிப்பதுடன், உடலில் இருந்து அதிகளவில் வியர்வை வெளியேறுவதால் சீக்கிரத்திலேயே களைப்பும் ஏற்படுகிறது. கொளுத்தும் வெயிலுக்கு இதமாக நுங்கு, இளநீர், கம்பங்கூழ், தர்ப்பூசணி பழம், பழச்சாறு, கரும்புச்சாறு ஆகியவற்றை பொதுமக்கள் அதிகளவு உட்கொள்ள துவங்கியுள்ளனர். இதனால், அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.